இந்திய அரசின் பாதுகாப்பு உள்கட்டமைப்பு சோதனை திட்டத்தின் கீழ் முதல் ட்ரோன் (ஆளில்லா விமானம்) சோதனை மையம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிப்காட்தொழிற்பூங்காவில் அமைக்கத் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கெல்டிரான், சென்ஸ் இமேஜ், ஸ்டாண்டர்டு டெஸ்டிங் அண்ட் காம்ப்ளையன்ஸ் மற்றும் அவிக்ஷா ரீடெய்லர்ஸ் ஆகிய 4 நிறுவனங்களுடன் இணைந்து 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 2.3 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவின் முதல் ட்ரோன் சோதனை மையத்தை அமைக்க இருப்பதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.
இந்த சோதனை மையத்தில் ஆராய்ச்சி, வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் சோதனைக்குத் தேவையான பல்வேறு வசதிகளும் ஒரே இடத்தில் சர்வதேச தரத்தில் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆளில்லா விமான உற்பத்தியில் தமிழகம் சர்வதேச மையமாகத் திகழவும், பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தற்சார்புத் தேவையைப் பூர்த்தி செய்யவும் இச்சோதனை மையம் வழிவகுக்கும் எனத் தெரிவித்தார்.